சனி, ஆகஸ்ட் 27, 2011

ரம்ஜான் பண்டிகை.


உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு

எனது மனமார்ந்த
ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



முஸ்லிம்களுக்கான ஐந்து கடமைகள் முக்கியமானது.

கலீமா (இறைவன் ஒருவனே;

முகமது நபி அவரது தூதர் என நம்பிக்கை வைத்தல்),

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்

ஆகிய ஐந்துமே அந்த கடமைகள்.

நோன்பு உங்களுக்கு கேடயமாக இருக்கிறது

என்கிறது இஸ்லாம்

. தீமைகள் பக்கம் செல்வதை தடுத்து,

நன்மைகளின் பக்கம் அது வழிநடத்துவதால்

அதை கேடயம் என்கிறது இஸ்லாம்.

உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டது போல்,

நோன்பு உங்களுக்கும் விதியாக்கப்பட்டுள்ளது

என குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில்

30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.

மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு

இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும்.

பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான்

மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான்.

மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது

உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது.

ஆனால் நோன்பு கடமையை நிறைவேற்றும்போது மட்டும்

பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும்.

அந்த சிரமத்தை சகித்து

இறைவனுக்காக நோன்பு வைப்பதால்

அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.

ஐந்து வேளை தொழுதல்,

குர்ஆன் படித்து, தர்மங்கள் அதிகம் செய்வது

ஆகியவற்றுக்கு ரம்ஜானில் முன்னுரிமை தரப்படுகிறது.

பொய், புறம் பேசுதல், ஏமாற்றுவது என

அனைத்து குற்றங்களில் இருந்தும்

மனிதன் தன்னை இம்மாதத்தில் தடுத்துக்கொள்கிறான்.

நோன்பு இருக்கிறோம் என்ற பயம் அவனை ஆட்டிப்படைக்கிறது.

ரம்ஜான் இல்லாத மாதங்களிலும் இந்நிலை தொடர வேண்டும்

என்பதற்காகவே ஒரு வாரம், பத்து நாள் என இல்லாமல்

30 நாட்கள் அதாவது ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பது

கடமையாக்கப்பட்டுள்ளது.

‘சஹர்’ எனப்படும் காலை உணவில் இருந்து

இந்த நோன்பு தொடங்குகிறது.

விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள்.

சூரிய உதயத்துக்கு முன்பாகவே (காலை 5 மணி) நோன்பு தொடங்கிவிடும்.

சூரியன் அஸ்தமனமான பிறகு,

அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள்.

நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர்.

நோன்பு வைக்க இயலாதவர்கள் யார்

என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள்,

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள்,

பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை.

வயதானவர்கள்,

குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள் (வசதி உடையோர்)

நோன்புக்கு பதிலாக,

30 நாள் உணவுக்கு செலவான தொகையை தர்மமாக தரலாம்.

மற்றவர்கள் ரம்ஜான் மாதத்துக்கு பிறகு,

தங்கள் விட்ட நோன்பை, மற்ற நாட்களில் வைக்க வேண்டும்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன்

கடமை முடிந்துபோவதில்லை.

இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற

பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான்.

அதில் ஒன்றுதான் ‘ஜகாத்’.

இதுவும் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ள

ஐந்து விஷயங்களில் ஒன்று.

நம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட

பணம், நகை ஆகியவற்றின் மீது

இரண்டரை சதவீத தொகையை எடுத்து

ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

இதுதான் ஜகாத்.

ஜகாத் தொகையை, முதலில் பெற தகுதி வாய்ந்தவர்கள்

வறுமையில் உள்ள உங்கள் உறவினர்கள்தான் என்கிறது இஸ்லாம்.

முதலில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

பிறகு, பிற ஏழைகளுக்கு கொடுக்கலாம்.

அடுத்தது பித்ரா.

ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து

மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும்.

பிறை பார்த்ததில் இருந்து

ஈகைப்பெருநாளுக்கான தொழுகைக்கு செல்வதற்கு முன்பு

ஏழைக்கு பித்ரா கொடுத்துவிட வேண்டும்.

அரிசி அல்லது கோதுமையை

ஒன்றரை படி அளவுக்கு வழங்கலாம்.

அல்லது அதற்குரிய பணத்தை வழங்கலாம்.

ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் என்றால்

6 பேருக்கும் கணக்கிட்டு பித்ரா தர வேண்டும்.

ஜகாத், பித்ரா தவிர சதகா எனப்படும் பிற தர்மங்களையும்

இம்மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இம்மாதத்தில் கடைசி பத்து நாள்களில்

ஒற்றைப்பட எண்களில் (21, 23, 25, 27, 29 இரவுகள்)

புனித இரவு ஒன்று இருக்கிறது.

அது லைலத்துல் கத்ர் இரவு.

அந்த இரவில் அதிகமாக இறைவனை வழிபடுங்கள்

என்கிறார் முகமது நபி.

ஆனால் அது எந்த இரவு என்பதை இஸ்லாம் கூறவில்லை.

அதனால் இந்த ஐந்தில் எந்த இரவாகவும் அது இருக்கலாம்

என¢ற படபடப்புடன்

இறைவனின் கருணையை பெற

ஐந்து இரவுகளும் விழித்திருந்து

பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

இம்மாதத்தின் கடைசி பத்து நாட்களில்

முகமது நபி இதிகாப் இருப்பார்கள்.

இதிகாப் என்பது பத்து நாட்கள் மசூதியிலேயே தங்கியிருந்து

வெளியிடங்களுக்கு செல்லாமல் இறைவனை மட்டுமே நினைத்து,

பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகும்.

பத்து நாட்கள் இதிகாப் இருக்க இயலாதவர்கள்,

5 அல்லது 3 நாட்கள்கூட இதிகாப் இருக்கலாம்.

இம்மாதம் முடிந்து,

ஷவ்வால் மாதத்தின் முதல் நாள்தான் ஈத் எனப்படும்

ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் சிறப்பு தொழுகை நடத்தி, தர்மம் செய்து,

உறவினர்களை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள்.

30 நாட்கள் நம்மை பக்குவப்படுத்திச் சென்ற நல்ல குணங்களை

அதன் பின்பும் நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.

இதுதான் ரம்ஜான் நமக்கு காட்டும் நல்வழி.

ரமலான் மாதத்தின் சிறப்பு:

மலான் மாதத்தில் நோன்புக்குரிய மாதம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே அதுபற்றி சொல்கிறார்கள்.

""ரமலான் மாதம் வந்துவிட்டால்

வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன.

நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன.

ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன.

சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன.

அதில் ஒன்று ரய்யான்.

அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர

வேறு யாரும் நுழைய மாட்டார்கள்.

யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும்,

நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ,

இன்னும் "லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ

அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

ஆதமுடைய மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர,

பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது.

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில்,

எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ,

அவருடைய உள்ளம் கியாம நாளிலே விழிப்புடன் இருக்கும்,'' என்கிறார்கள்

அண்ணலார். ""நோன்பு எனக்குரியது.

அதற்கு நானே கூலி கொடுப்பேன்.

ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான்.

தன் இச்சைகளை அடக்கியிருந்தான்.

மேலும், நோன்பு திறக்கும் போதும்,

தன் இறைவனை சந்திக்கும் போதும்

நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,'' என்கிறான் அல்லாஹ்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:
எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள்

பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.
ஒரு காடைக்குருவி போன்ற

சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக,

சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.
பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர்

அநியாயமும், இணை வைத்தலும்,

வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார்.

பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம்

என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?:

ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது.

இந்த இனிய நாளில், ஒரு மனிதன்

தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும்

என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட

இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.

நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட,

செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள்.

நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட,

வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.
மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட,

உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.

உப்பை நீர் கரைப்பது போன்று,

நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும்.

கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று,

துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும்.

உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது

இவ்வுலகத்தையும்,

இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ

அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.

அன்பு செலுத்தாதவன்

அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.
தர்மம் செய்ய இயலாதவன்

ஒரு நற்செயல் செய்வானாக அல்லது

ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக.

அதுவே அவனது ஈகை.
உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால்,

அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும்

என்று விரும்புவர்,

அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.
மனிதன் எதைச் செய்கிறானோ

அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான்

இறைவன் கவனிக்கிறான்.

புதன், ஆகஸ்ட் 24, 2011

கிருஷ்ண ஜெயந்தி,

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்'
'ந‌ல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும்
அறத்தை நிலை நிறுத்தவும்
நான் யுகந்தோறும் பிறக்கிறேன்'

கிருஷ்ண‌ ப‌ர‌மாத்மா

கிருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, காலாஷ்டமி, கோபால்காலா என்று இந்தியர்களால்
பலவிதமாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை,
ஆவணி (ஷ்ராவண) மாசத்தின் அஷ்டமியில்
ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்திற்கு எட்டாம் நாள்

ரோகினி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி திதியில் கண்ணன் பிறந்தான் என்பதை நினைவூட்டும் வகையில் வீட்டின் நுழைவாயிலில்

குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை

மாவால் பதியச் செய்யப்படுகின்றமை
இன்றைய நாளின் சிறப்பம்சமாகும்.

இதனால் கிருஷ்ணன் தம் வீட்டிற்கு வந்ததைப் போன்ற

ஓர் இனிய உணர்வு ஏற்படுகின்றது.

இவ்விரதம் தம்பதிகளாகவே அனுஷ்டிக்கப்பட வேண்டும் எனவும்

பகலில் விரதம் இருந்து

இரவில் வசுதேவ தேவகியுடன் ஸ்ரீ கிருஷ்ணனை பூஜித்து

கண் விழித்திருந்து அவரது சரிதத்தைக் கேட்பதன் ஊடாக

பகவானின் அனுக்கிரகத்தை அடைய முடியும் என நம்பப்படுகிறது.

விரதகாரர்கள் மறுநாள் பூஜை செய்து

அன்னதானம் செய்வதன் ஊடாக

விரதத்தை பூர்த்திசெய்கின்றமை வழமையாகும்.


உன்னதமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில்
பாகவத்தில் அவதார கட்டத்தைப் பாராயணம் செய்வதும்
பாகவதம் கேட்பதும் புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.

நிவேதனங்கள்


பிரப்பம் பழம், நாவல் பழம்
அவல்
வெண்ணெய்
நாட்டுச்சர்க்கரை
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று
பகவானே தன் விருப்பத்தைக் குறிப்பிட்டபடி
துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிதளவு நீர்

நைவேத்திய பட்சணங்கள்
சுகியன்
அப்பம்

தட்டை
வெல்லச் சீடை
உப்புச் சீடை
முள்ளு முறுக்கு
முறுக்கு

புதன், ஆகஸ்ட் 17, 2011

பூணூல்


பூணூல் அல்லது முப்புரிநூல்

இருபிறவி கொளவதாக கருதப்படும் சாதிகளில்
இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே
உடலின் குறுக்கே அணியும்
மூன்று பிரிகளைக்கொண்ட பருத்தி நூலாலான மாலையாகும்.
நூல்களை இணைக்கும் முடிச்சில் மஞ்சள் தடவி இருக்கும். சிறுவர்களுக்குஉபநயனம் செய்து இந்நூலை அணிவிப்பர்.
பூணூலில் இருக்கும் மூன்று புரிகள்,
காயத்திரி(மனம்),
சரசுவதி(வாக்கு),
சாவித்திரி(செய்கை)
தேவியரைக் குறிக்கும்.
இதன் மூலம் பூணூலை அணிபவர்
மனம்,வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க
எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறார்.


சடங்குகள் செய்யும்போது பூணூல் மூன்று விதமாக அணியப்படுகிறது:

  1. நேர்முறை - வழமையான முறையில் இடது தோளிலிருந்து வலது கைப்புறம் அணிதல்....கடவுளருக்கு வழிபாடுகள் செய்யும்போது.
  2. மாலையாக - கழுத்து வழியே நெஞ்சின் மீது மாலையாக அணிதல் - இருடிகளுக்கு தர்ப்பணம் கொடுக்கையில், உடலுறவு கொள்கையில் மற்றும் இயற்கை கடன்களை கழிக்கும்போது
  3. எதிர்மறையாக - வலது தோளிலிருந்து இடது கைப்புறம் அணிதல் - இறந்தவர்களுக்கு கருமாதி செய்கையில், திவசம் கொடுக்கையில்

உபநயனம் போது ஓர் நூல்பிரியே அணிவிக்கப்படுகிறது.

பின்னர் திருமணத்தின் போது இரண்டாவதும்

பிள்ளை பிறந்தபின் மூன்றாவதும் அணியப்படுகிறது.

உலகில் தனது கடமைகளை

அவனுக்கு நினைவுறுத்திய வண்ணம் இருக்க

இவ்வாறு செய்யப்படுகிறது.

பூணூல் அணிவிக்கப்பட்ட ஒருவர்

அதனை தன் வாழ்நாள் முழுவதும் கழற்றாது அணிந்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம்நாளில்

பழையது களைந்து புதியது அணிகிறான். .


பூணூலை "யக்ஞோபவீதம்' என்று அழைப்பர்.

இதற்கு "மிகவும் புனிதமானது' என்று பொருள்.

பூணூலின் மகிமையை விளக்க ஒரு கதை உண்டு.

ஒரு கிராமத்தில் வசித்த பிராமணர் ஒருவர்

பூணூல் தயாரிப்பதைத் தனது பணியாகக் கொண்டிருந்தார்.

பரமபக்தியுடன் இந்தத் தொழிலை அவர் செய்து வந்தார்.

மந்திரங்கள் சொல்லி கயிறு திரித்து,

சுவாமியின் முன்னால் வைத்து பூஜித்து கேட்பவர்களுக்கு கொடுப்பார்.

ஒருநாள் அவரது மனைவி, ""இந்த பூணூல் விற்பனையில் நமக்கு என்ன கிடைத்து விடும். நம் பெண் வயதுக்கு வந்து நிற்பது தங்களுக்கு தெரியவில்லையா? பக்கத்து ஊரில் தானே ராஜா இருக்கிறார். அவர் தர்மவானாம். நீங்களும் போய் ஏதாவது உதவி வாங்கி வாருங்கள்.

குழந்தைக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம்,'' என்றாள்.

பிராமணரும் ராஜாவை சந்தித்தார்.

தன் கையில் இருந்த பூணூலுக்கு சமமாக

தங்கம் கொடுத்தால் போதும் என்று கேட்டார்.

""பூணூலுக்கு சமமாக பொன் கேட்கிறாரே!

இவருக்கு என்ன ஆயிற்று?'' என்று ராஜா மனதுக்குள் நினைத்துக் கொண்டார். இருந்தாலும், தராசு கொண்டு வரப்பட்டது.

தட்டில் பூணூலை வைத்தார் பிராமணர்.

ராஜா ஒரு பொற்காசை தூக்கிப் போட்டார்.

தராசு அசையவில்லை.

இரண்டு, மூன்று, பத்து, அரண்மனையில் இருந்த

அத்தனை காசையும் வைத்தாயிற்று,

தனது கிரீடத்தையும் வைத்தார்.

ஊஹும்... அசையவில்லை தராசு முள்.

அங்குள் ளோர் மட்டுமல்ல,

பிராமணரும் இதைக் கண்டு திகைத்தார்.

மந்திரி இதைக் கவனித்தார்.

ஏதோ விபரீதம் நடக்கப்போவது தெரிந்து,

""பிராமணரே! நீங்கள் நாளை வாருங்கள்.

நாங்கள் பொருள் தருகிறோம்,'' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

பிராமணருக்கு பயம்.

பூணூல் அளவுக்கு தங்கம் கேட்க,

ஏதோ மந்திரஜாலம் செய்து நாம் பொன் கேட்கிறோம் என

ராஜா நினைத்திருப்பாரோ!

நாளை ஒருவேளை நம்மை

இதற்காக சிரச்சேதம் செய்துவிட்டால் என்னாவது?

மறுநாள் அவர் தனது அன்றாட அனுஷ்டானங்களைக் கூட செய்யவில்லை. அரண்மனைக்கு சென்றார்.

பூணூலை தராசில் போட்டார்.

ராஜா ஒரு காசைப் போட்டார்.

தட்டு தாழ்ந்து விட்டது.

எல்லாருக்கும் ஆச்சரியம்..

பிராமணர் கிடைத்த காசுடன் தப்பித்தால்

போதுமென கிளம்பி விட்டார்.

ராஜா மந்திரியிடம் இந்த மாற்றத்திற்கான காரணம் கேட்டார்.

""முதல்நாள் தகுந்த ஆச்சார அனுஷ்டானங்களை முடித்து

பூணூலைத் தொட்டதால் அதற்கு மதிப்பு அதிகமாயிற்று.

மறுநாள் பயத்தில் பிராமணர் அதைச் செய்யாமல்,

பூணூலைத் தொட்டார். அதன் மதிப்பு குறைந்து விட்டது,'' என்றார்.

எனவே, பூணூல் அணிபவர் களும்,

அதனைத் தயாரிப்பவர்களும்

ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது.

ஆவணி அவிட்டத் தன்று பூணூல் அணியும்

இளைய தலைமுறையினரும்

இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியமாகும்.