சரஸ்வதி பூஜை அன்று பாட வேண்டிய பாடல்கள்-
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகையேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.
வில்லிபாரதம்.
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை -தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பாள் இங்கு வாராதிடர்.
கம்பர்
வெள்ளத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்.
பாரதியார்
வெள்ளை கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை
அறியா சனத்தில் அரசரோடு என்னை
சரியா சனம்வைத் தாய்.
காள மேகப் புலவர்
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதெய்த நல்காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே.
குமரகுருபரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக