செவ்வாய், ஜூலை 05, 2011

சப்த மாதர்கள்

சிவாலயங்களில் சப்த மாதர்களின் வடிவங்களைப் பார்க்கலாம்.

சப்தகன்னியரும், சப்தமாதர்களும் ஒன்றே என்று 


கூறப்படுவதும் உண்டு.





பிராமி, மகேசுவரி,  கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும்  

சாமுண்டி  என்ற ஏழு தேவியரே "சப்த மாதர்கள்l " எனப்படுவர்

1. பிராமி

பிரம்மனின் சக்தி.


பிரமனின் படைப்புத் தொழிலுக்கு துணை நிற்பவள்.




இவர் மஞ்சள் நிறமானவர்.

 நான்கு முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டு காணப்படுவார்.

வலது பக்க மூன்று கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும்.

மற்றைய இருகரங்களிலும் அட்சமாலை, சிகுவா என்பன காணப்படும்.

இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க

மற்றையன புத்தகம், கமண்டலம் என்பனவற்றை ஏந்தியவாறு காணப்படும்.

அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள் பிராமியை

நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன.

இவர் செந்தாமரை மீது உட்கார்ந்திருப்பார்.

வாகனமாகவும் கொடியாகவும் அன்னம் காணப்படும்.

மஞ்சள் ஆடை உடுத்தி, ஆபரணங்களை அணிந்திருப்பார்.

தலையில் கரண்ட மகுடம் காணப்படும்.

இவள் சருமத்தின் தலைவி.

இவளுக்கு அபராதம் செய்தால் சரும நோய்கள உண்டாகும்.

புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளித்தால்

இந்த அன்னை சாந்தம் அடைவாள்.


2. மகேசுவரி

சிவனின் சக்தி.


வெள்ளை நிறமானவள்.  
 
இவர் ஐந்து முகங்களையும்,

ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார்

என ஸ்ரீதத்துவநிதி,விஷ்ணுதர்மோத்திரபுராணம் கூறுகின்றன.

. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும்,

அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில்

ஒன்று அபய முத்திரையிலிருக்க

ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும்,

இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க

ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன

இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.

விஷ்ணுதர்மோத்திர புராணத்தில் இவருக்கு ஆறு கரங்களும்,

ரூபமண்டனம், மச்சபுராணம், அம்சுமத்பேதாகமம், பூர்வ காரணாகமம்

என்பனவற்றில் நான்கு கரங்களும் கூறப்பட்டுள்ளது.

இவரது தலையில் ஜடா மகுடம் காணப்படும்.

அதில் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார்.

எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.



இவள் உடலிலுள்ள கொழுப்புச் சக்திக்கு தலைவி.

இவள் சினம் கொண்டால் உடலில் வெட்டுக் காயம் உண்டாகும்.

சுண்டலையும் நீர்மோரையும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால்

இந்த தேவியின் மனம் குளிறும்.



3. கௌமாரி

முருகனின் சக்தி.

தெய்வானையும், வள்ளியும் கௌமாரியின் உருவங்களே என்பர்.

 ஆறுமுகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார்

என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது.

பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க

மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி,

தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை ஏந்தியிருக்கும்.

அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில்

இவருக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது.

அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள்

இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும்.

மற்றையன வேல், சேவல் என்பனவற்றினை ஏந்தியிருக்கும்.



இவர் பதின்மூன்று கண்களைக் கொண்டிருப்பார் எனவும்  கூறுகின்றது.

மயிலினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவள்.

இரத்தத்தின் அதி தேவதை இவள்.

இந்த தேவிக்கு அபராதம் செய்தால் , பசுக்களுக்கு "கோமாரி' நோய் வரும்.

எழுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு கொடுத்தால் ,

தேவியின் அருள் கிட்டும்; நோய் தீரும்.




4, வைஷ்ணவி

விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர்.

ஆறு கரங்களைக் கொண்டிருப்பார்.

 வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும்.

 மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும்.

 இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும்

மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும்.

அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நூல்கள்

வைஷ்ணவியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன.

 வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும்,

 மார்பினையும் கொண்டிருப்பார்.

மஞ்சள் ஆடை அணிந்திருப்பார்.

விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து

கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.




இவள் சீழுக்கு அதி தேவதை.

இவள் சினமுற்றால், விஷக் கடிக்கு ஆளாக நேரிடும்.

பாயாசம் நிவேதனம் செய்து, பலகர்களுக்கு அளித்தால்

இத்தேவியின் திருவருள் கிடைக்கும்.




5. வராகி

வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர்.

பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும்

பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார்.

இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும்.

வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும்.

மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும்.

இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட

மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை

ஏந்தியவாறு காணப்படும்.

 இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என

வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது.


தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும்

மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும்

இந்நூலில் கூறப்படுகின்றது.

தண்டநாத வராகி பொன்னிறமானவர்.

 பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார்.

இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம்,

அங்குசம், தண்டம் என்பன காணப்படும்.

இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர்.

மூன்று கண்களைக் கொண்டிருப்பார்.

பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார்.

வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும்.

இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர்.

 பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர்.

வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும்.

தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார்.

 சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


எழும்புகளின் அதி தேவதை.

இவள் சினமுற்றால், வாதமும், பித்தமும் உண்டாகும்.

வெள்ளரிக்காயும் முறுக்கும் நிவேதனம் செய்து,  பக்தர்களுக்கு அளித்தால்

நல்ல பலனைத் தருவாள் இவள்.


6.இந்திராணி

இந்திரனின் சக்தி.

இவர் பொன்னிறமானவர்.

ஆறு கரங்களைக் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது.

வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும்,

மற்றையனவற்றில் அட்ச மாலை, வஜ்ரம் என்பன காணப்படும்.

 இடது பக்க கரங்களிலொன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும்

மற்றையன தாமரை, பாத்திரம் என்பனவற்றினை

ஏந்தியவாறும் காணப்படும்.

அம்சுமத்பேதாகமம், பூர்ணாகாரணாகமம் என்னும் நூல்களில்

 இவருக்கு நான்கு கரங்கள் கூறப்படுகின்றன.

 அவற்றுள் இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்க

மற்றைய இரு கரங்கள் வேல், வஜ்ரம் என்பனவர்றினை ஏந்தியிருக்கும்.

தேவி புராணத்தில், அங்குசம், வஜ்ரம், என்பனவற்றினை ஏந்திய

இரு கரங்களுடன் கூறப்பட்டுள்ளது. 

ஸ்ரீ தத்துவநிதியில் ஆயிரம் கண்களும்,

அம்சுமத்பேதாகமத்தில் மூன்று கண்களும்,

 பூர்வகாரணாகமத்தில் இரு கண்களும் கூறப்படுகின்றது.

ரூபமண்டனம் என்னும் நூல் இவரை பல கண்களுடன்

காட்டவேண்டும் எனக் கூறுகின்றது.

இவரது தலையில் கிரீடம் காணப்படும்.

பல ஆபரணங்களை அணிந்திருப்பவர்.


இந்திராணி சௌமிய இயல்பினைக் கொண்டவர்.

இவரது வாகனமாகவும், கொடியாகவும் வெள்ளை யானை

இடம்பெற்றிருக்கும்.

இவள், தசைகளின் செயல்பாடுகளை கட்டுப் படுத்தும் தேவதை.

இவள் சினமுற்றால், அம்மை நோய் பெருகும்.

பலாக்களை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு அளித்தால்

இவள் அருளைப் பெறலாம்.


7. சாமுண்டி

கறுப்பு நிறமானவர்.

 பயங்கரமான தோற்றம் கொண்டவர்.

இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர்.

பாம்புகளை உடலில் அணிந்திருப்பார்,

ஒட்டிப்போன மெலிந்த வயிறு,

குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

 இவருக்குப் பத்துக்கரங்கள் காணப்படும்.

வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரை,

அங்குசம், வாள் என்பனவும்,

இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி என்பன

காணப்படும் என சாமுண்டியின் உருவ அமைப்பினைப் பற்றி

ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது.

 விஷ்ணு தர்மோத்திர புராணத்தில் சாமுண்டி

செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

தேவி மகாத்மியம், இவர் இரு கரங்களைக் கொண்டிருப்பார் எனவும்

அவை வாள், பாசம் என்பன ஏந்தியிருக்கும் எனவும் விபரிக்கின்றது.

இவர் நான்கு கரங்களையும், மூன்று கண்களையும் கொண்டவர்;

தடித்த மேல் நோக்கிய கேசம் காணப்படுமெனவும்

செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனவும்

ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

இவள் நரம்புகளின் அதி தேவதை.



பராசக்தியின் உடம்பிளிருந்து தோன்றிய ஆறு தேவியரால்

மகிஷாசுரனை அடக்க முடிய வில்லை.

எனவே, சிவபெருமான்   தன்  நெற்றிக் கண்ணிலிருந்து

   பத்தர   காளியைதோற்றுவித்தார்,

இவளே சாமுண்டியாக மாறி, அறுவருக்கும் தலைமை தாங்கி,

அசுரனை வதம் செய்தாள் .

இவள் சினம் கொண்டால்,  ஊரில் கலகம் விளையும்.

தயிர் அபிஷேகம் செய்து,

அவலில் செய்த தின்பண்டங்களை நிவேதனம் செய்து,

பக்தர்களுக்கு அளித்தால் இவள் அருள் பெறலாம்.


சக்தி     வழிபாட்டின் தொடக்கக் காலத்தில் ஏழு


அன்னையராகிய பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி,

இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே

கோயில்கள்     அமைந்திருந்தன.     

காலப்போக்கில் அவை சிதைவுற்றமையால்,

அந்தத் தெய்வச் சிலைகளை ஒரு சேரத் தொகுத்துப்

பெருங்    கோயிலில்     வரிசையாக நிறுவிப்

பெருந்தெய்வத்துக்குப் பரிவார தெய்வங்களாக்கியுள்ளனர்.

இந்தத் தெய்வங்களுடன் யோகேசுவரி என்ற

பெண் தெய்வத்தையும் சேர்த்து அன்னையர் எண்மர்

எனக் கொண்டாடினர்.

சப்தமாதர் வேறு, சப்தகன்னியர் வேறு என்ற கூற்றும்,

சப்தமாதரே சப்தகன்னியர் என்ற கூற்றும்

அறிஞர்களிடையே உண்டு.

 புராணத் தொடர்பில் அந்தகாசுரனை அழிப்பதற்காக

இறைவனுக்குத் துணை நின்ற சக்திகளே

யோகேசுவரியும் சப்தமாதர்களுமாக அமைந்தனர் என்பர்.


ஆதிபராசக்தி
பிராமி

வைஷ்ணவி






கௌமாரி








வராகி
 

சாமுண்டி






இந்திராணி


மகேஸ்வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக