ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி
தனது பயணத்தை துவக்குகிறது.
இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும்,
இரவு நேரம் நீண்டும் காணப்படும்.
காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.
ஆடி"மாதம் அசுப மாதம் என்பார்கள்.இந்த மாதத்தில் திருமணம் நடக்காது.
புதுமணத் தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கமும் உண்டு.
ஆனால் காவிரிக் கரையோர மாவட்டங்களில் ஆடி மாதம்
மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருமணத்தன்று மணமக்கள் சூடிய பூமாலைகளை,
பெண் வீட்டில் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.
அவை வாடி, கருகி போனாலும்
அப்படியே பத்திரமாக பெட்டியில் இருக்கும்.
ஆடி மாதம் 18ம் நாள் "ஆடிப் பெருக்கு" நாளன்று
காவிரியாற்றின் படித்துறைகளில் பெரும் கூட்டம் திரளும்.
படித்துறையில் வாழையிலை விரித்து,
விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்கள் வைத்து,
புது மஞ்சள் கயிறு, குங்குமம்,மஞ்சள்,
சட்டைத்துணி போன்ற மங்கலப் பொருட்களும் வைத்து
காவிரி அன்னையை பெண்கள் வணங்குவார்கள்.
வீட்டில் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்
இந்த பூஜையை நடத்துவார்.
பொதுவாக தென்மாவட்டங்களில் பெண்கள்
தங்கத்தில் தாலிச்சரடு அணிவார்கள்.
ஆனால் காவிரி கரையோர மாவட்டங்களில்,
எவ்வளவு வசதி படைத்திருந்தாலும்,
தாலிச்சரடு மட்டும் மஞ்சள் நூல்கயிற்றில் அணிவது சிறப்பு.
ஆடிப் பெருக்கன்று, காவிரிக்கு பூஜையிட்ட பின்னர்,
வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்,
தன்வீட்டு மற்ற பெண்களுக்கு
புதிய தாலிக்கயிற்றை அணிவிப்பார்.
திருமணமாகாத பெண்களுக்கும்
இந்த மஞ்சள் நூல் கயிறு அணிவிக்கப்படும்.
திருமண நாளில் இருந்து பாதுகாத்து வைத்திருந்த
மணமாலைகளை, புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விடுவார்கள்.
"இதன்மூலம் இல்லறம் செழிக்கும்", என்பது
தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
ஈரோடு மாவட்டம் பவானியில்,
காவிரியும், பவானியும் சங்கமிக்கும் கூடுதுறையில் ஆரம்பித்து,
பூம்புகாரில் வங்கக்கடலுடன் காவிரி கலக்குமிடம் வரையிலும்
ஆடிப்பெருக்கு உற்சவம் வழிவழியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மாமண்டபம் படித்துறையில்
காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி
வெகு விமரிசையாக நடக்கும்.
ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து
அம்மாமண்டபம் படித்துறைக்கு உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடாகி, எழுந்தருள்வார்.
அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு ஆஸ்தானமிருப்பார்.
பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும்
மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி
ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.
ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்
என்பது ஐதீகம்.
இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள்
முக்கியத்துவம் பெறுகின்றன.
அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு,
பூஜையறையில் குத்துவிளக்கேற்றி
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும்
பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள்.
பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை
நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள்.
பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து,
உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல்,
குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள்
போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.
ஔவை நோன்பு:
ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு
குறிப்பிடத் தக்கது.
இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால்
விரைவில் திருமணம் நடக்கும்.
மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உ
ப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள்.
பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம்
இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும்.
அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை.
பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார்.
ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து
இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு.
இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில்
பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
மகாலட்சுமி வழிபாடு:
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில்
அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி,
தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.
அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.
அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம்,
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு
ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால்
நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு
உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
சண்டி ஹோமம்:
ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து
விசேஷ பூஜை செய்வார்கள்.
பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி,
பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை,
வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள்,
ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும்
"நவசக்தி அர்ச்சனை' நடைபெறும்.
ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற
சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.
புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம்.
தட்சணாயன காலம் எனப்படும்,
அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும்,
இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற
அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும்
அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல்
அவதிப்பட்டார்கள் எனவும்,
இதனால்தான் இந்த மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும்
தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக புராணம் சொல்கிறது.
துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால்
பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான்
ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு
உகந்த மாதமாக அமைத்து
அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க
அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது.
சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில்
பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது.
அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும்.
அதிலும் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு.
ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள்,
தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும்
என்ற எண்ணத்தில் இறைவன்,
ஆடி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை
பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.
இறந்தவர்களின் ஆத்மா மகிழ்ச்சியுடன்
தன் வம்சத்தினரை காணப்போகிறோம்
என்ற ஆவலோடு வருவார்கள்.
அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கினால்
நமது வம்சத்திற்கே எந்த தீங்கும் ஏற்படாது.
திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, நோய், வறுமை
போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது
முன்னோர்களை வணங்காமல் இருப்பதே என்கிறது கருட புராணம்.
தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள
சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை
ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம்.
மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.
சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல்
ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு
ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்து கின்றனர்.
இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில்
ஸ்ரீ சக்கரம் உள்ளது.
ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க,
ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.
எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
திருவானைக்காவலில் ஆடி வெள்ளி யன்று
அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும்,
உச்சிக்கால வேளையில் பார்வதி யாகவும்,
மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதா
ல் பல நற்பலன்களைப் பெறலாம்.
துளசி மாடம்முன் கோலமிட்டு,
மாடத்திற்குப் பொட்டிட்டு,
துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்.
குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.
இந்த ஆடிப் பௌர்ணமி அன்றுதான்
திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ் வரர்
ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு
ஐவண்ணங் களைக் காட்டியருளியது.
அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.
காலை முதல் மாலை வரை இந்த லிங்கம்
ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.
ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது.
இவர் கல்விக்குரிய கடவுள்.
இவர் வழிபாடு தொன்மையானது.
திருமால் உடலிலிருந்து மதுகைடபர் என்பவர்
வியர்வையில் தோன்றினர்.
இந்த அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்து
குதிரை முகத் துடன் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.
வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட,
திருமால் குதிரை முகம் கொண்டு
அவர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.
போரிட்டதால் பரிமுகக் கடவுளின் உக்ரம் தணியவில்லை.
அதனால் திருமகள் மடியில் அமர,
அவர் உக்ரம் தணிந்து லட்சுமி ஹயக்ரீவரானார்.
ஆடி மாதப் பௌர்ணமியை "ஆஷாட சுத்த பௌர்ணமி' என்பர்.
இந்நாளில் துறவி கள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொள் வார்கள்.
அன்று துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.
சாதுர்மாஸ்ய விரதம் என்பது
மகான்கள், துறவிகள் ஓரிடத்தில் நான்கு மாதங்கள் தங்கி
வேதங்களை ஆய்வு செய்வதாகும்.
இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில்
சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள்.
முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும்.
இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள்.
மூன்றாம் மாதம் தயிர் சாப்பிட மாட்டார்கள்.
நான்காம் மாதம் பருப்பு வகையறாக்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
இவையெல்லாம் அந்தக் காலத்தில் மேற்கொண்டதாக
வரலாறு சொல்கிறது.
இந்தக் காலத்திலும் ஒருசில துறவிகள்
இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.
குரு பூர்ணிமா என்று சொல்லப்படும்
வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி)
எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால்,
தாங்கள் பெற்ற கல்விச் செல்வம்
மேன்மேலும் வளர்ந்து
தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பர்.
ஆடி கிருத்திகை!
ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள்
அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே!
அன்றைய தினம் காவடி எடுத்து,
பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர்.
ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை
சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.
ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக,
கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர்.
அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா
கொண்டாடப்படுகிறது.
ஜெய் ஜெய் விட்டல்! ஆடி மாதத்தில் வரும்
தேய்பிறை ஏகாதசியை "யோகினி ஏகாதசி' என்றும்,
வளர்பிறை ஏகாதசியை "சயினி ஏகாதசி' என்றும் குறிப்பிடுவர். குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன்
தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான்.
அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி
குஷ்ட நோயால் அவதிப்பட்டான்.
பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து
நோயிலிருந்து மீண்டான்.
இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு. மகாபலியின் கர்வத்தை அடக்க
திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு.
மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு
திருப்பாற்கடலுக்குச் சென்றவர்
ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார்.
எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது
. மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி'
என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு,
""பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா'' என்றும்
""விட்டல் விட்டல் ஜெய்ஜெய் விட்டல்'' என்றும்
கோஷமிட்டுக் கொண்டு
பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள். ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி
ஒரு கல்பத்தில் அவதரித்தாள் என்று புராணம் சொல்லும்.
ஸ்ரீமீனாட்சி அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.
அம்மனுக்குரிய மாதமாக ஆடி மாதம் போற்றப்படுவதால்,
ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்து,
கூழ் படைத்து, ஏழைகளுக்கு தானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது.
ஆடிப் பதினெட்டு, காவிரித் தாயாரை வழிபடும் நாள்.
ஆடிப் பெருக்கு என்றழைக்கப்படும் இந்நாளில்,
ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான நீருக்கு வழிபாடு நடைபெறும் நாள்.
அன்று பெண்கள், காவிரி நதியைத் தாயாக மதித்து வழிபடுவர்.
அன்று காவிரி அம்மனுக்கு உகந்த காதோலை, கருகமணி,
பல வகையான மலர்கள் வைத்து வழிபடுவார்கள்.
தயிரன்னம், சர்க்கரைப் பொங்கல் போன்ற
சித்திரான்னங்களும் வைத்து காவிரித் தாயை வணங்குவார்கள்.
இந்நாளில் கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில்
திருமணம் நடைபெற வேண்டும்
என்று நேர்ந்துகொண்டு வழிபடுகின்றனர்.
காவிரியம்மன் முன் படைத்த மஞ்சள் கயிறுகளை
வழிபாட்டின் முடிவில் ஒருவருக்கொருவர் சூட்டி மகிழ்கிறார்கள்.
கஜேந்திர மோட்ச வைபவம் எல்லா திருமால் திருத் தலங்களிலும்
ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
அன்று பெருமான் கருட சேவையில் வீதியுலா வருவார்.
ஆடி” என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர்.
பிரம்மதேவனை வேண்டி பல வரங்கள் பெற்ற இவன்,
நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும்
ஆற்றல் கொண்டவன்.
ஒருமுறை பரமேஸ்வரனையே ஏமாற்ற விரும்பி
உமாதேவியின் உருவம் எடுத்துக் கொண்டு ஈசனை அணுகினான்.
இதனை அறிந்த சிவபெருமான்,
தம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்தார்.
சிவனையடையும் பக்தி ஞானம் அவனுக்கிருந்த காரணத்தால்
அன்னை உமாதேவி மனமிரங்கி
அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை “”ஆடி” என்று அழைத்தாள்.
அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாக அமைந்தது.
* ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில்
அதிகாலையில் எழுந்து குளித்து,
தூய ஆடை அணிந்து,
சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து,
செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு
சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும்.
வாழையிலை மீது நெல்லைப்பரப்பி
அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட
செல்வம் கொழிக்கும். சகல சௌபாக்யங்களும் தேடி வரும்.
ஆடி மாதத்தையும் மார்கழி மாதத்தையும்
“பீடை மாதங்கள்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம்.
உண்மையில், “பீட மாதங்கள்” என்றுதான் பெயர்.
அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து
வழிபடவேண்டிய மாதங்கள் என்பதே சரியானது.
* ஆடி மாதம் பௌர்ணமியன்று
சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து,
கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை,
கருஊமத்தம் பூமாலை அணிவித்து,
மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால்
எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
தட்சிணாயனம், உத்தராயணம் என்னும் இரண்டு அயனங்களுமே
புண்ணிய காலங்கள் என்று கொள்ளப்படுகின்றன.
தட்சிணாயனத்தின் ஆரம்பம் ஆடி மாதம்.
உத்தராயணத்தின் ஆரம்பம் தை மாதம்.
அயன ஆரம்ப காலங்களில் உள்ள
இவ்விரு மாதங்களுமே தனிச்சிறப்புடையவை.
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும்.
இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால்
இம்மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகள்
ஆடிக்கிருத்திகை, ஆடிப்பௌர்ணமி,
ஆடிப்பூரம், ஆடிஅமாவாசை
ஆகிய நாட்களும் மிகவும் விஷேஷமாகக் கருதப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக