![]() |
இரு முடி கட்டுதான் சபரிமலை யாத்திரைக்கு முக்கியமானது.
இருமுடி கட்டு இருந்தால் மட்டுமே
பதினெட்டு படிகளில் ஏறமுடியும்.
பதினெட்டு படிகளில் ஏறி ஐயப்பனை தரிசித்தால்தான்
அந்ததயாத்திரை சிறப்படையும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இருமுடி இரண்டு பகுதிகளைக் கொண்டது.
இருமுடியின் முன்முடியில் நெய், தேங்காய்
மற்றும் பூஜை பொருட்கள் இருக்கும்.
பின்முடியில் வழிப்பயணத்துக்கான
அரிசி போன்ற ஆகாரப் பொருட்கள் இருக்கும்.
முன்முடி தெய்வீகமானது.
பின்னது வழித்துணைக்கானது.
முன்முடியின் துணை வழியே பின்முடி.
ஐயப்பனை நெருங்க நெருங்க முன்முடியின் கனம் கூடி
பின்முடியின் கனம் குறையும்.
இரு முடி சுமத்தல் இருவினை சுமத்தலே…
இதை நன்கு சிந்தித்தால் வாழ்க்கைப் பயணத்தில்
இரை, இறை ஆகிய இரண்டும் இணைந்ததே இருமுடி என்பதை உணர முடியும்!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை 1 ஆம் திகதி
அதிகாலை எழுந்து நீராடி
கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து
தங்களது குருசாமி அல்லது பூஜாரிகள் மூலம்
மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
விரதம் இருக்கும் நாட்களில்
காலை – மாலையில் குளித்து
சுவாமி ஐயப்பனை நினைத்து பூஜைகள் நடத்தி
சைவ உணவுகளை உண்டு வருவார்கள்.
பக்தர்களின் வீடுகளில் ஐயப்ப சுவாமியின் படத்துக்கு
மாலை அணிவித்து பூஜைகளும் நடக்கும்.
வீடுகளில் உள்ள பக்தர்கள் தாய், தந்தை,
மனைவி, குழந்தைகள் மற்றும் உற்றார், உறவினர்களும்
இந்த பூஜை பஜனைகளில் கலந்து கொள்வார்கள்.
சபரிமலைக்கு பக்தர்கள் புறப்பட்டு சென்றதும்,
அவர்கள் சுகமாக சுவாமி தரிசனம் செய்து
நிறைவாக வீடு திரும்ப
குடும்பத்தினர் தினமும் பஜனை பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை 1 ஆம் திகதி முதல்
பக்தர்கள் இருமுடி கட்டி வரத் தொடங்குவார்கள்.
ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள்
ஒரு மண்டலம் விரதம் இருந்து செல்வார்கள்.
சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்லும் பக்தர்கள்
18 ஆம் படி ஏறி, சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்து மகிழ்வார்கள்.
ஜனவரி 14 ஆம் திகதி சபரிமலை பொன்னம்பலமேட்டில்
மகரஜோதியை பக்தர்கள் தரிசிப்பார்கள்.
சபரிமலை கோவிலின் உச்ச தெய்வீக நிகழ்ச்சியான
இந்த மகரவிளக்கு தரிசனத்தை காண
இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பது
கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
18 மலைகளின் நாயகன்
நாடு முழுவதும் ஆண், பெண், குழந்தைகள் என
அனைத்து மக்களின் உள்ளங்களில் வீற்றிருக்கும் சபரிமலை ஐயப்பன்
18 மலைகளின் நடுவில் நடுநாயகனாக வீற்றிருக்கிறார்.
18 மலைகளின் நடுவில் 148.8 மீட்டர் உயரத்தில் சபரிமலை உள்ளது.
இங்கு கிழக்கு முக தரிசனமாக சுவாமி ஐயப்பன் அமர்ந்துள்ளார்.
சபரிமலை கோவிலை சுற்றி 18 மலைகளும்,
அங்கு 18 தெய்வங்களும் உள்ளன.
18 மலைகள் :- சபரிமலை, பொன்னம்பல மேடு,
கவுண்டன்மலை, நாகமலை,
சுந்தரமலை, மயிலாடும்மேடு,
ஸ்ரீபாத மலை, சிற்றம்பலமேடு,
கர்கிமலை, மதாங்கமலை,
தேவர்மலை, நிலைக்கல் மலை,
தலப்பாறமலை, நீலிமலை,
இஞ்சிப்பாறைமலை, காளகெட்டிமலை,
கரிமலை, பூதுச்சேரிமலை.
18 மலை நாயகனுக்கு உகந்தது 18 படிகள்.
இந்த படிகள் 18 வகை புராணங்களை தெரிவிக்கிறது.
அதனால் தான் இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே
பொன்தகடு வேய்ந்த 18 ஆம் படியில் ஏற அனுமதிக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
பம்பை நதியின் சிறப்பு
தர்ம சாஸ்தாவின் அவதாரமான ஐயப்ப சுவாமியை
பந்தள ராஜா பம்பையில் தான் குழந்தையாக கண்டெடுத்தார்.
இந்த நதியில் பக்தர்கள் புனித நீராடி
பலி சடங்குகளை நிறைவேற்றி மலை ஏறுகிறார்கள்.
மறவப் படையுடன் போராடி உயிர் நீத்த
ஐயப்பனின் படை வீரர்களுக்காக ஈமச் சடங்குகள் நடத்தியதின்
நினைவாக பம்பையில் தர்ப்பணம் நடத்தப்படுகிறது.
வெற்றி கொண்ட வீரர்களுக்கு
பம்பை நதிக்கரையில் தான் ஐயப்பன் விருந்து வைத்தார்.
அதனை நினைவுகூறும் வகையில்
“பம்பா சத்யா” என்ற விருந்து பம்பை நதிக்கரையில்
இப்போதும் பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பம்பா விளக்கும் ஏற்றப்படுகிறது.
பேட்டை துள்ளல்
முதல் முறையாக மாலை அணிந்து செல்லும் கன்னி ஐயப்பன் சாமிகள்
எருமேலியில் பேட்டை துள்ளிய பின்புதான்
சபரிமலை பயணத்தை தொடருகிறார்கள்.
ஐயப்பனின் உற்ற நண்பரான வாவர் மசூதி இங்கு தான் உள்ளது.
பேட்டை துள்ளல் கொச்சம்பலத்தில் தொடங்கி அம்பலத்தில் முடிவடைகிறது.
சபரிமலைக்குப் போகும் குருசாமி, கன்னிசாமி மற்றும்
விரதமிருந்து வருடா வருடம் போய் வரும் பக்தர்கள்
கழுத்தில் இருப்பது துளசி மாலை.
மலைக்கு விரதமிருந்து போகும் பக்தர்கள்,
இரு வேளையும் பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும்.
அதுவும் மார்கழி மாதக் குளிரில்.
கார்த்திகை மாதத்தில் தொடங்கி,
தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு.
சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம்.
ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான்
இந்தத் துளசி மாலையை அணிகின்றனர்.
மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க,
அவர் கழுத்தையும்துளசி மாலை அலங்கரிக்கும்.
இந்தத் துளசி மாலை அணிவதற்கு ஒரு புராணக் கதையும் இருக்கிறது.
ஐயப்பன் ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்தவர்.
ஹரிதான் மோஹினி ரூபமாக வந்தார்.
பஸ்மாசுரனை வதைக்க எடுத்த ரூபம்.
பஸ்மாசுரன் தன் கையையே
தன் தலையில் வைத்து மரணமடையச் செய்தவள் அந்த மோஹினி.
தேவ அசுரர்கள் அமிருதம் பெறப் பாற்கடலைக் கடைய,
அதிலிருந்து அமிருதம் வந்தது.
அதை எல்லோருக்கும் வழங்க,
திருமால் மோஹினியாக வர,
ஹரன் அவள் அழகில் மயங்கி,
அவளுடன் சேர ஆசைப்பட்டார்.
மோகினி தான் இன்னொரு தடவை மோகினியாக வரும் போது
அவர் விருப்பம் நிறைவேறும் என்று முன்பு சொல்லியிருந்தாள்.
அதன் தருணம் இப்போது வந்தது.
பஸ்மாசுரனை வதைத்த பின்
ஹரன், ஹரியான மோகினியுடன் சேர,
ஹரிஹர புத்திரன் தோன்றினார்.
ஹரிஹரசுதனின் தாய், மோகினி. உண்மையாக விஷ்ணு அல்லவோ.
அதனால் விஷ்ணுவிற்குப் பிடித்தமான துளசி மாலை அணியப்படுகிறது.
தவிர துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள்
ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு
ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.
இருமுடியில் முன் புறம் ஒரு பையும் பின் புறம் ஒரு பையும் இருக்கிறது.
முன்புறப் பையில் முதலில் சுபமாக மஞ்சள், பின் குங்குமம் வைத்த பின்
தீபம் ஏற்றத் திரி, நெல்பொரி, அவல் காணிக்கை என்று
சில பொருட்களை வைத்திருந்தனர்.
அத்துடன் மிகவும் முக்கியமாக ஒரு தேங்காயும் இருந்தது.
அந்தத் தேங்காயின் சிறப்பு என்னவென்றால்
அந்தத் தேங்காயினுள் பசும்நெய் விடப்படுகிறது.
தேங்காயினுள் ஒரு துவாரம் இட்டு,
அதற்குள் நெய் ஊற்றிப் பின்
அது கீழே சிந்தாமல் நன்கு அடைத்துவிடுகிறார் குருசாமி.
பின்னால் இருக்கும் பையில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, வெல்லம்,
ஏலக்காய், முந்திரிப் பருப்பு, திராட்சை என்று பிரயாணத்தின் போது
சில கோயில்களில் பிரசாதம் செய்ய உபயோகமான பொருட்கள் வைக்கப்படுகின்றன.
சபரி யாத்திரையில் இந்த இரணடு பைகளில் ஒன்று குறைந்துகொண்டே வரும்.
அதுதான் பின்புறப் பை.
ஆனால் முன்புறப் பை ஐயப்பனைத் தரிசிக்கும் வரை தொடரும்.
பின்புறப் பை குறைவதை,
நமது ஆணவம், தன்முனைப்பு, கர்வம், தன்நலம்….
போன்றவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது என எடுத்துக்கொள்ளலாம்.
முன்புறப் பையில் இருக்கும் தேங்காயும்
அதனுள் இருக்கும் நெய்யும் ஐயப்பனை அபிஷேகம் செய்யவும்
அதனால் நம்முள்ளே இருக்கும் விளக்கு எரிந்து,
ஒளியுடன் பிரகாசிக்கும் நிலையும் ஏற்படுகிறது என்லாம்.
ஏன் இந்த இரு முடி சுமக்க வேண்டும்?
ஐயப்பன் தாயின் தலைவலியைத் தீர்க்க.
“புலிப்பாலைக்கொண்டு வா”என்ற உத்தரவுக்குப் பணிந்து,
தன் தாயைக் காப்பாற்றக் கானகம் சென்றார்.
அவரது வழிப் பயணத்திற்குத் தேவையான பொருட்களை
இருமுடியில் சுமந்துகொண்டு சென்றார்.
இதை ஞாபகப்படுத்திக்கொள்ளத்தான்
ஐயப்பன் விரதம் வைக்கும் பக்தர்கள்,
இருமுடியைச் சுமக்கிறார்கள்.
கடுமையான முறையில்
அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும்
மாலையிட்ட ஐயப்ப பக்தன்,
சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால்,
பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள்
என்பது நிதர்சனமான உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக