புதன், நவம்பர் 02, 2011

பாராயண துதிப்பாடல்கள்

கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் 


விரத காலத்தில் பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் 


முருகப் பெருமானைப் பற்றிய எளிய துதிப்பாடல்கள் 

ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார் வினைகள் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகத் தெய்வம்
வேறுபடை தேவையற்ற வேலவனாம் தெய்வம்
யாருமற்ற அடியவரை ஆட்கொள்ளும் தெய்வம்
கூறும் வேதத்து உட்பொருளாய் 

குளிர்ந்து நின்ற தெய்வம்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள் 
மைந்தா குமரா மறை நாயகனே.

ஆடும் பரிவேல் அணிசேவல் என 
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில் 
சாடும் தனி யானை சகோதரனே.

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் 
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து 
மைந்தன் என்மீது மனமகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள்செய்.

முருகனே செந்தில் முதல்வனே மாயோன் 
மருகனே ஈசன் மகனே- ஒருகைமுகன் 
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே! "செந்திநகர்ச்
சேவகா' என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் 
என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் 
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனைவிளங்கு வள்ளிகாந்தனைக் 
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!

விழிக்குத் துணை மென்மலர்ப் பாதங்கள் 
மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா 
என்னும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

சிந்தாமணியே திருமால் மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகநோக்கி வரம்
தந்தாய் முருகா தணிகா சலனே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக