புதன், ஜனவரி 05, 2011

ஆண்டாள் --- ஸ்ரீவில்லிப்புத்தூரில் மார்கழி பூஜை




ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
அதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது.
அதன் பிறகு காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் கண்கொள்ளாக் காட்சியாகும். அமுது நைவேத்தியம் செய்யப்படும் போது, திருப்பாவையில் வரும் ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பக்தர்களால் உணர்ச்சிகரமாகப் பாடப்படும்.
பிறகு தீர்த்தம், சடாரி ஆகியவற்றுடன் பிரசாதம் வழங்கப்படும்.குளிர் மிகுந்த அந்த அதிகாலை நேரத்தில் ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீஆண்டாள் சமேதராக எழுந்தருளும் ஸ்ரீரங்க மன்னாரை திருப்பாவை பாடி வணங்கும்போது மனதுக்குக் கிடைக்கும் பரவசமே தனிதான்!
மார்கழி மாதம் 23ம் திகதி இரவு தொடங்குகிறது, ஆண்டாள் நீராடல் உற்சவம். இந்த உற்சவம், தை மாதப் பிறப்பு வரை கொண்டாடப்படும்.
மார்கழி 22ம் திகதி இரவு ‘பிரியா விடை’ வைபவம் நடைபெறும்.
ஸ்ரீ வட பெருங்கோவிலுடையான் சந்திக்கு எழுந்தருளும் ஆண்டாளுக்கு, அங்கே மகா மண்டபத்தில் தனியாக திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. பிறகு பக்தர்கள் மலர் மழை பொழிய, வேத கோஷம் முழுங்கபுஷ்பக் கொண்டை அலங்காரத்துடன், மூலஸ்தானத்துக்கு ஸ்ரீஆண்டாள் எழுந்தருள்கிறாள்.
தொடர்ந்து வடபத்ரசாயி பெருமாளுடன் சேர்ந்து காட்சிதரும் ஆண்டாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜை நடைபெறும்.
பிறகு சந்நிதியில் திரை போடப்படும்.
திருப்பாவை நோன்பு ஏற்க வட பெருங்கோயிலுடையானிடம் ஆண்டாள் அங்கே அனுமதி வேண்டுவதாக ஐதீகம்.
சிறிது நேரத்துக்குப் பிறகு திரை நீக்கப்பட்டு, அரையர் ஸ்வாமியால் 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்' என்ற திருப்பாவை முதல் பாசுரத்தக்கு விளக்கம் சொல்லப்படும்.

திருப்பாவையின் மற்ற பாசுரங்களும் சொல்லப்படும்.
காலை வேளையில், மக்களுக்கான தரிசனம் முடிந்து, ஸ்ரீஆண்டான் பெரியாழ்வார் சந்நிதி வாசலை அடைகிறாள். அப்போது, அரையர் ஸ்வாமி திருப்பல்லாண்டு பாடுவார்.
நீராடல் உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில் வட பெருங்கோ விலின் ராஜகோபுர வாசலில் ஸ்ரீ ஆண் டாள் எழுந்தருள, 'நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். (அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.
இதில் ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம். இந்தப் பாடல், 'ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்’ என்று முடிவுறும். சமஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆக ‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின் 2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம். 3ஆம் நாள் கண்ணன் கோலம்,
4ஆம் நாள் முத்தங்கி சேவை,
5ஆம் நாள் பெரியபெருமாள் கோலம்,
6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,
7ஆம் நாள் தங்க கவச சேவை என தரிசனம் தருவது சிறப்பு.
திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத்தில், மாலை 3 மணி க்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் வைபவம் நடை பெறும்.

நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.

எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் நடைபெறும்.

நெற்றிச் சுட்டி, தலைநகர் தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன், சவுரி தரித்து கோதா ராணியாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆண்டாளின் அழகுக் கோலத்தைத் தரிசிப்பது பக்தர்கள் செய்த பாக்கியமே!
‘பிறகு, தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தலையைக் கோதி, சிடுக்கு நீக்கி, சுகந்த தைலம் சாத்துவர். இவ்வாறு மூன்று முறை எண்ணெய் காப்பு சாற்றி, சவுரியை பெரிய கொண்டையாக முடித்து மலர் மாலைகள் அணிவிப்பர். தொடர்ந்து, ‘பத்தி உலாத்துதல்’ வைபவம் முடிந்து நீராடல் வைபவம், ஆரம்பிக்கும்.
அப்போது சங்க நிதி, பதும நிதி மற்றும் ஆயிரம் துளைகள் கொண்ட வெள்ளித் தாம்பாளம் கொண்டு மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவில் தங்கக் குடத்தால் [நாடக மேதை கன்னையா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது ]அபிஷேகம் செய்வார்கள்.
எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் ‘கூடாரை வல்லி’ வைபவம் மார்கழி 27ஆம் நாள் கொண்டாடப்படும்.
ஆனால், ஸ்ரீ வில்லிபுத்தூரில் மட்டும் தை 1ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளின் சிம்மாசனத்தில், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீபெரிய பெருமாள் எழுந்தருள, அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆச்சார்யர்களும் எழுந்தருளி... ‘கூடாரை வெல்லும் சீர்' முதலான திருப்பாவைப் பாடல்கள் பாடப்படும்.
அப்போது, ‘அக்கார அடிசில்’ நைவேத்தியம் ஆகின பிரசாதமாக தரப்படும் மறுநாள், தந்தையாகிய பெரியாழ்வார் சந்நிதியில் ஸ்ரீஆண்டாள் எழுந்தருளி, ‘கணு’ வைபவம் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக