திங்கள், ஜனவரி 10, 2011

பொங்கலின் சிறப்பு


சிறுகிழங்கு, பனங்கிழங்கு,



கரும்பின் தத்துவம் -

பொங்கலில் முதல் இடம் பெறுவது கரும்பு.

இது இனிமையின்அடையாளம்

அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை.

நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது.

அடிக்கரும்பு தித்திப்பாய் இனிக்கும்.

கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது.

உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால்,

தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல

வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும்,

அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும்.

கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ

வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும்

உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது.

இதேபோல வாழ்க்கையில் கடுமையான

சோதனைகள் இருந்தாலும்

அவற்றைக் கடந்து சென்றால் தான்,

இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம்.

அதனாலேயே மகரசங்கராந்தியான

பொங்கல் பண்டிகையில் கரும்பினை

இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து

அழகுபடுத்துகிறோம். ..

மஞ்சள் கொத்து -

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின்

அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது.

மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள்.

அதனால் தான் சுமங்கலிப்பெண்கள்

மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம்.

எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில்

மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.

திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல்

என்று கூட ஒருசடங்குஇருந்தது.

முனைமுறியாத அரிசியான அட்சதை

 தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர்.

எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த

பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.

சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது

அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து

வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம்

இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை

பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி

அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி

மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் '

என்னும் சடங்காகச்செய்வர்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள்

அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி

சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர்.

வீட்டில் உள்ள அனைவரும்

சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும்

என்பதே இச்சடங்கின் நோக்கம்.

கிழங்கு-

பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறுகிழங்கு,

சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன.

திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும்

பொங்கல் சீர்வரிசையில் இவை

நிச்சயம் இடம் பிடிக்கும்.

சீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள்

அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை.

மண் எத்தனை தன்மையுடையதாக இருந்தாலும்,

அதை தனது இருப்பிடமாக எடுத்துக் கொண்டு,

அங்குள்ள நீர் வளத்தைப் பயன்படுத்தி விளைந்துவிடும்.

 இதைப்போலவே, மணப்பெண்ணும்

தனது கணவன் வீட்டிலுள்ளவர்கள்

எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும்,

அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

அதையே தன்னையும், புகுந்த வீட்டையும்

வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக் கொண்டு

 திறம்பட செயல்பட வேண்டும்.

இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில்

 கிழங்கு வகையை கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

சில இடங்களில் உருளை, மரச்சீனி, சீனிக்கிழங்கு,

வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும்

கொடுக்கும் வழக்கம் உள்ளது.

சிறுகிழங்குகள் திருநெல்வேலி பகுதியிலும்,

பனங்கிழங்குகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும்

மார்கழி, தை மாதங்களில் விளையும் என்பது குறிப்பிடத்தக்கவை.

பச்சரிசி காட்டும் தத்துவம்

பச்சரிசியைப் போல நாம் இன்று

பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம்.

அதைப் பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது.

அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில்

இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு,

ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக வேண்டும்.

அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,

முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க

 சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது.

பச்சரிசி போல, உலகியல் ஆசைகளைச்

சுமந்து கொண்டிருக்கும் நாம்

பக்குவமில்லாமல் இருக்கிறோம்.

ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற

நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம்,

முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு

பக்தி என்னும் பானையில் ஏற்றி,

ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால்

 பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல்

அருட்பிரசாதமாகி விடுவோம்.

பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல,

 பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான்.

பொங்கல் நாளில் பச்சரிசி காட்டும்

இத்தத்துவ உண்மையை உணர்ந்து

நம்மை நாமே பக்குவமாக்கிக் கொள்ள முயற்சிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக